தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரைக்கு வரும் பிரதமர், அன்று காலை புதுச்சேரி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் சென்று ஓய்வு எடுத்துவிட்டு, விமானம் மூலம் மதியம் 3:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்கள், பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மங்களூரு-ராமேஸ்வரம் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இத்திட்டங்கள் தென்மாவட்ட மக்களின் பயண வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு மாலை 4:00 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அறுபடை வீடுகளில் முதல் படை வீடான இந்த கோயிலில் பிரதமரின் தரிசனம் பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தரிசனத்துக்குப் பிறகு மாலை 4:30 மணியளவில் புறப்பட்டு, மண்டேலா நகருக்கு (மதுரை விமான நிலையம் அருகே) செல்கிறார்.
இதையும் படிங்க: தேமுதிகவுடன் கூட்டணியா? மார்ச் 1ல் மோடி வருவார்! அதுவரை பொறுங்க! நயினார் நாகேந்திரன் சூசகம்!

மாலை 5:30 மணியளவில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி ராமதாஸ், அமமுக தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். தென்மாவட்டங்களில் என்டிஏவின் வலிமையை வெளிப்படுத்தும் இந்த கூட்டம் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்கூட்டத்துக்குப் பிறகு மாலை 6:10 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லி திரும்புகிறார். இந்த ஒரு நாள் பயணம் அரசு திட்டங்கள், ஆன்மிகம், அரசியல் பிரசாரம் ஆகியவற்றை இணைத்து தமிழகத்தில் என்டிஏவின் தேர்தல் உத்தியை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடிக்கும் இந்த நேரத்தில் பிரதமரின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
இதையும் படிங்க: ஒருபோதும் பொறுத்துக்க முடியாது! அஞ்சாம செயல்படுங்க! தமிழக அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அட்வைஸ்!