தமிழ்நாடு சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் முதற்கட்டமாக மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு இடங்களுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் செப்டம்பர் 7 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 ஆம் தேதியும் நடைபெறும்.
தேர்தல் அட்டவணை இவ்வாறு அமைந்துள்ளது: வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 முதல் 16 வரை; பரிசீலனை செப்டம்பர் 17; திரும்பப் பெறும் கடைசி நாள் செப்டம்பர் 19. அறிவிப்புடன் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாதிரி நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த இரு தொகுதிகளும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா வெற்றி பெற்ற இடங்கள். தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அதிமுகவில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.
இதையும் படிங்க: 5 தொகுதி இடைத்தேர்தல் விவகாரம்: செப்.8 வரை தடை நீட்டித்தது சென்னை ஹைகோர்ட்!!

மரகதம் குமரவேல், சத்யபாமா உள்ளிட்ட ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு பதவி விலகினர். மேலும் முதல்வர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை விட்டுக்கொடுத்ததால் மொத்தம் ஏழு இடங்கள் காலியாயின. மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தல் மனுக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், அவற்றுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சட்டச் சிக்கல்கள் இல்லாத இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவெகவில் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இடைத்தேர்தல், மூன்று மாதங்களாக ஆட்சியில் இருக்கும் தவெக அரசுக்கு முதல் தேர்தல் சோதனையாக அமையும். அதிமுக தனது இழந்த தொகுதிகளை மீட்க முயற்சிக்கும் நிலையில், திமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் இரு தொகுதிகளிலும் தேர்தல் போட்டி தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னைக்கு மாற்றாக 2வது தலைநகரம்? தமிழகத்தில் மீண்டும் எழும் முக்கிய கோரிக்கை!