மதுரையில் இன்று நடைபெற்ற பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது தனது பாணியில் அரசியல் நையாண்டிகளுடன் ஆளுங்கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். மதுரை பறவை பேரூராட்சிப் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டப்பட்ட புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜ கண்ணப்பனை பச்சோந்தி என மிகக் காரசாரமாக விமர்சித்தார். ராஜ கண்ணப்பனை அரசியலில் அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான்; ஆனால் அவர் ஒரு கட்சியில் நிலையாக இருந்ததே கிடையாது. சென்னையில் சேடப்பட்டி முத்தையாவின் காலைப் பிடித்துக் கெஞ்சியவர் தான் இந்த ராஜ கண்ணப்பன் என பழைய விவகாரங்களை கிளறி வெடி வைத்தார்.

தொடர்ந்து வைகோ குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, வாரிசு அரசியலை எதிர்த்துத் திமுகவிலிருந்து வெளியேறிய வைகோ, இன்று அதே வாரிசு அரசியலை ஆதரிப்பது வேடிக்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அண்ணன் வைகோவிற்கு இப்போது ஞாபக மறதி வந்துவிட்டது அன்று அதிமுகவோடு கூட்டணி வைத்து பம்பர சின்னத்தில் ஜெயித்ததை அவர் மறந்துவிட்டார். திண்டுக்கல் மாநாட்டில் அவர் அப்பா என்று அழுதுகொண்டே கலைஞரைச் சரணடைந்த அன்றே அவரது வீர சகாப்தம் முடிந்துவிட்டது என ஆப்ரேஷன் பாணியில் விமர்சித்தார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குச் சரியான மரியாதை இல்லை என்றும், திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வர எடப்பாடியார் ஏதேனும் வழி செய்வாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கிசுகிசு பாணியில் அரசியல் நகர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!
நிகழ்ச்சியின் போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் கொடுத்த உரிமையாளருக்குச் சால்வை அணிவித்துத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட செல்லூர் ராஜு, தலைவா, இதையெல்லாம் டிவில போடுங்க, எவ்வளவு நல்லது செஞ்சிருக்கோம்னு மக்கள் பார்க்கட்டும் என்று தனக்கே உரிய பாணியில் கமெண்ட் அடித்து கலகலப்பை ஏற்படுத்தினார். நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை திரிஷா தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விக்கு, அது அவரிடம்தான் கேட்க வேண்டும், என்னிடம் திமுக - அதிமுக போட்டி குறித்து மட்டும் கேளுங்கள் என மழுப்பலாகப் பதிலளித்தார். இறுதியில், திமுகவினர் என்னை வீழ்த்தத் துடிக்கிறார்கள், ஆனால் வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும்; அடுத்த சட்டமன்றத்திலும் உங்களைச் சந்திப்பேன் தலைவா!" என்று கூறிப் பேட்டியை சுபம் போட்டு முடித்தார்.
இதையும் படிங்க: "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!