தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமகவின் எம்.பி அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் எம் பி சந்திரசேகரன், மதிமுகவின் எம்.பி வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!
அதன்படி திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் என அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர்.

கடந்த ஜூன் 2ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், ஜூன் 6ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் தனபால் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து 10ம் தேதி (நாளை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், 12ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.

ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் பணம் கட்ட வேண்டும். ஆனால், இவர்களுக்கு எந்த எம்எல்ஏக்களும் முன்மொழியவில்லை என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். திமுக சார்பில் போட்டியிடும் 4 பேரும், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!