பாஜகவின் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் தமிழ்நாடு பிரிவு சார்பில், வரும் ஜூன் 22 அன்று மதுரையில், பாண்டிகோவில் அருகே அம்மா திடலில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு, முருகப் பெருமானின் அறுபடை வீடு கோவில்களை சீரமைக்கவும், ஹிந்து பண்பாடு மற்றும் தர்மத்தைப் பாதுகாக்கவும், கோவில்களை மீட்டெடுக்கவும், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கவும் “குன்றம் காக்க, கோயிலை காக்க” என்ற கருப்பொருளில் நடத்தப்படுகிறது.

இந்த மாநாடு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த மாநாட்டை எதிர்த்தன. இது மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் அரசியல் உத்தி என்று விமர்சித்தனர்.
இதையும் படிங்க: கீழடி விவகாரத்தில் ஸ்டாலின் தவறாக வழிநடத்துகிறார்... கடுமையாக விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்!!

மாநாட்டிற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நிகழ்வை அனுமதித்த நீதிமன்றம், அது முற்றிலும் ஆன்மீக ரீதியாகவும் அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்ய நிபந்தனைகளை விதித்தது.

இதனிடையே, திருவாரூர் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வாகன பேரணியில் ஈடுபட்டனர். மதுரையில் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு குறித்து திருவாரூரில் ஆலோசிப்பதற்கு முன்னதாக இந்த வாகன பேரணி நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியிலிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். காவல்துறை உத்தரவையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வாகனங்களில் பேரணி நடத்தினர்.
இதையும் படிங்க: பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இதை செய்யாதீர்... ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்!!