ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த சின்னமாயாகுளம் அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் இரண்டு நபர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏர்வாடி காவல் நிலைய போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கோபி ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது.
இருவரது உடலின் பல்வேறு இடங்களிலும் பலத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்களை கைப்பற்றிய ஏர்வாடி காவல் நிலைய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, கொலையாளிகளைப் பிடிப்பதற்காக காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கணேசன் மற்றும் கோபி ஆகிய இருவரும் எப்போது கொலை செய்யப்பட்டனர், கொலைக்கான காரணம் என்ன, இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நடைபெற்றுள்ள இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.3,383 கோடி சொத்து.. திடீரென பிச்சைக்காரராக மாறிய பாஜக எம்எல்ஏ! மும்பையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!