நாட்டின் பொருளாதார நிலவரத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் 5.25 சதவீதமாக தொடர்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களின் வட்டி விகிதங்களில் உடனடி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய காலத்திற்கு வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் எனப்படுகிறது. இந்த விகிதம் வங்கிகளின் கடன் வழங்கும் கொள்கையிலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களின் வட்டி விகிதத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம். அந்த கூட்டத்தில் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி, சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டு வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மக்களை ஏமாற்றும் புது டெக்னிக்..!! கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க..!! RBI வார்னிங்..!!

அதன்படி, மூன்று நாட்கள் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி தனது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பணவீக்க நிலவரம் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் தற்போதைய நிலையை தொடர்வதே பொருத்தமானதாக இருக்கும் என நாணயக் கொள்கை குழு முடிவு செய்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதால், தற்போது வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி சுமை ஏற்படாது. அதேபோல் புதிய கடன் பெற திட்டமிட்டுள்ளவர்களுக்கும் தற்போதைய வட்டி விகிதங்கள் தொடரும் வாய்ப்பு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி துறை, தொழில் துறை மற்றும் கடன் பெறுவோரிடையே முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: வெற்றி தமிழகம் அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!