இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளன.

பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி, போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம்.
இதையும் படிங்க: இபிஎஸ் தலைமையில் கூடியது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! ராஜ்ய சபா வேட்பாளர்கள் முன்மொழிவு..!
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

குலசேகரபட்டினத்தில் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும், ரோகினி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது. உடனடியாக குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து முதலில் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய ரோகிணி 6 ஹெச் 200 சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, அந்த ராக்கெட் 75.24 கி.மீ உயரத்தை எட்டி 121.42 கி.மீ தூரம் சென்று கடலில் விழுந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கியது.

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் குலசேகரன்பட்டினத்தில் அடுத்த வருடம் சிறிய அளவிலாக ராக்கெட் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறி வருகின்றனர். தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக குலசேகரன்பட்டினத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள 2200 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை சுற்றி கருங்கற்களால் தரமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதே போல் ராக்கெட் ஏவுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு மணல்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு பெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது தவிர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கட்டுமான வசதிகளும் துரிதமாக நடந்து வருகிறது. மேலும் ராக்கெட் லான்ச் செய்வதற்கு சர்வீஸ் பில்டிங், இஸ்ரோ லான்ச் காம்ப்ளக்ஸ்சும் இந்த இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு குலசேகரன்பட்டினத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்காக பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: முகுந்தனிடம் டீல் போட்ட அன்புமணி... ஷாக்கில் ராமதாஸ் ... அடுத்து நடக்கப்போவது என்ன?