தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில், வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 (வியாழக்கிழமை) அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். மொத்தம் 234 தொகுதிகளிலும் இந்த நேரத்தில் வாக்குகள் பதிவாகும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 21, 2026 அன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் முழுமையாக நிறுத்தப்படும். 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 126ன் கீழ் அமல்படுத்தப்படும் இந்த ‘அமைதிக் காலம்’ (Silence Period) விதிமுறைகள் கடுமையானவை. இதன் நோக்கம், வாக்காளர்கள் அமைதியான சூழலில் சிந்தித்து வாக்களிக்க உதவுவதாகும்.

இந்தக் காலகட்டத்தில் யாரும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் அல்லது பிரசார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரங்களை தொலைக்காட்சி, ரேடியோ, சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ்/டுவிட்டர் உள்ளிட்டவை), குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட எந்த மின்னணு ஊடகத்திலும் பொதுமக்களுக்கு வெளியிடக் கூடாது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: ஏப்ரல் 16 முதல் தொடக்கம் என அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!
இசை நிகழ்ச்சி, திரையரங்கம், கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதோர், ஏப்ரல் 21 மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியிருக்கிறார்களா என்பதை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் அனைத்தும் ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் செயலிழக்கும். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் வரையறுக்கப்பட்ட வாகன அனுமதி மட்டுமே வழங்கப்படும்: சொந்தப் பயன்பாட்டுக்கு ஒரு வாகனம்,
தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம், முகவர் அல்லது பணியாளர்களுக்கு ஒரு வாகனம்.
இந்த அனுமதிகளைத் தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது அழைத்துச் செல்ல வாகனங்களை வாடகைக்கு எடுப்பது, வாங்குவது அல்லது பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்பிரிவு 133ன் கீழ் முறைகேடாகக் கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும். தேர்தல் அலுவலகங்கள் வாக்குச்சாவடியிலிருந்து குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

ஒரு அலுவலகத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தேவையற்ற கூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த விதிமுறைகளை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 126(2)ன் படி இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் ஆணையம் இந்த விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் அமைதியான சூழலில் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, சுதந்திரமாக வாக்களிக்க இந்த ஏற்பாடுகள் உதவும். தேர்தல் நடைமுறையை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் விதிகளை மீறும் முதலமைச்சர்! அரசு வாகனத்தை பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார்!