பணி நிரந்தரம் மற்றும் தனியார் மயமாக்குதல் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் 13 வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி வந்த தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுடன் எட்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து போராடி வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன்படி தூய்மை பணியாளர்களை அகற்றுவதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவில் குண்டு கட்டாக தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராவோம்! நம்ப தான் முதன்மை சக்தி.. விஜய் உத்வேகம்..!
இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அறவழியில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை அராஜக போக்கோடு மனிதாபிமானமற்ற முறையில் பாசிச திமுக அரசு கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிவதாகவும், காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.
குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா என்றும் ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.,அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை என்று கேட்டார்.
அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள் எனவும் சாடினார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் தூங்கி எழுந்தாச்சா? இது சினிமா கிடையாது! விளாசிய தமிழிசை…