தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், வரும் மார்ச் 23-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி முத்துக்குமரன் இன்று தீர்ப்பு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த சாட்சிகள் விசாரணை மற்றும் சிபிஐ தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தேதி குறிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினர். இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஐந்து பேருக்கு அனுமதி அளித்தால் வழக்கு முடிப்பு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

தமிழக அரசால் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு, பின்னர் மக்கள் போராட்டத்தால் சிபிஐ வசமானது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 2,000 பக்கங்களுக்கும் மேலான குற்றப்பத்திரிகை மற்றும் தடயவியல் சான்றுகள் இந்த வழக்கில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தமிழக வரலாற்றில் காவல் நிலையச் சித்ரவதை மரணங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட போலீசாருக்குக் கடுமையான தண்டனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், அன்றைய தினம் மதுரை நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!