மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் அங்குள்ள தீபத்தூண் அருகே பூஜை செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று மிக முக்கியமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நீதிமன்றம் குறிப்பிடும் ஐந்து நபர்களை மட்டும் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் முடித்து வைக்கிறேன் என தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக உரிய முடிவெடுத்து, நாளை மறுநாள் மாலை 4 மணிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!
வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும், ஆனால் மதுரை மாநகரக் காவல் ஆணையர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2025 டிசம்பர் மாதம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது. இருப்பினும், அங்குத் தொடர்ந்து பூஜை செய்ய அனுமதி கோரித் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டுச் சென்ற நிலையில், இன்று நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த உத்தரவு ஆன்மீகத் தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!