நடிகர் ராஜேஷ் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ராஜேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த்திரை மற்றும் சின்னத்திரை மூத்த நடிகர், பின்குரல் கலைஞர், எழுத்தாளர், மிகச்சிறந்த வாசிப்பாளர், வலையொளியாளர் என பன்முகத்திறன் பெற்ற படைப்பாளி, மனிதநேயமிக்க மாண்பாளர் ராஜேஷ் அவர்களின் மறைவு மனவேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்..

கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, பயணங்கள் முடிவதில்லை, மகாநதி, இருவர், விருமாண்டி உள்ளிட்ட பல திரைக்காவியங்களில் தன்னுடைய தனித்துவமிக்க குணச்சித்திர நடிப்பின் மூலம் தனிமுத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் தனிப்பட்ட முறையில் என்மீது பெரும் பாசமுடைய அண்ணன் ராஜேஷ் அவர்கள், அவரிடமிருந்த கிடைத்தற்கரிய சிறந்த புத்தகங்களை எனக்கனுப்பி தந்து படிக்க பரிந்துரைத்த பேரன்புக்காரர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகார அட்டூழியங்கள் தான் திராவிட மாடலா? தவெகவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்...

நாங்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துகள் மிகச்சரியானது என்பதை பல தருணங்களில், பல மேடைகளில் தயக்கமின்றி வெளிப்படுத்திய பெருந்தகை அண்ணன் ராஜேஷ் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், வலையொளி பின்தொடர்பாளர்களுக்கும் தன்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ஜெய்பீம்" என எழுதியதால் டிஸ்மிஸ்... மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்!