சென்னை திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் மீதுள்ள ஆதங்கத்தையும், தனது எதிர்கால அரசியல் கனவுகளையும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார். பிரசாரத்தின் இறுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (தவெக) தொண்டர்கள் கோஷமிட்டதால், சீமான் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூரில் போட்டியிட்டதை நினைவு கூர்ந்த சீமான் ஒத்த ரூபாய் காசு கொடுக்காமல் எனக்கு 50,000 வாக்குகளை அளித்தீர்கள். ஆனால், திமுக, அதிமுகவை வெல்ல வைத்ததன் மூலம் நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள். உங்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலை இன்றும் தொடர்கிறது. எண்ணூர், கடலூர், தூத்துக்குடி என மீனவ மக்கள் வாழும் இடங்களில்தான் நச்சு ஆலைகள் தொடங்கப்படுகின்றன. இந்த அநீதியைத் தடுக்கவே நான் அன்று போட்டியிட்டேன் என்றார்.
15 ஆண்டுகளாகத் தான் கொடுத்து வரும் குரல் மக்களின் காதுகளில் விழவில்லை என ஆதங்கப்பட்ட அவர் 15 வருஷமாக் கத்துறேன், உன் காதுல விழவே மாட்டேங்குது. ச்சீ கருமம்! உங்ககிட்ட பேசுறதுக்குப் பதிலா சுடுகாட்டுல போய் பேசிருந்தா, 'பாவம்பா இவன் இவ்வளவு கத்துறானே'னு ஒரு பத்து பிணமாவது எழுந்து வந்து 'என்னப்பா உன் பிரச்சனை'னு கேட்டிருக்கும். இந்த முறை எவ்வளவு பேருக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை வருதுனு பார்ப்போம். இது திருவொற்றியூரா இல்லை திருவெட்டியூரா என்பது ஏப்ரல் 23-ல் தெரியும்" எனச் சாடினார்.
இதையும் படிங்க: 8 ஆயிரம் டோக்கன் கொடுத்தால் முதல்வர் பதவி தருவார்களா? ஆலந்தூரில் சீமான் நக்கல் பேச்சு!

தனது ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேசுகையில் சாலையில் போலீசார் நிற்க மாட்டார்கள், ஆனால் எங்கும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். பெண்களைக் கை பிடித்து இழுத்தால் அடுத்த நிமிடம் தூக்கி வெளுத்து விடுவேன். நான் ரீல் பிக் பாஸ் இல்லை, ரியல் பிக் பாஸ்... ஐ அம் வாட்சிங்! நீங்கள் ஒழுங்காக இருக்க வேண்டும். கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீரை முற்றிலும் கட்டணமில்லாமல் (இலவசமாக அல்ல) தரமான முறையில் வழங்குவேன் என்றும், மற்ற அனைத்திற்கும் காசு வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடற்கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள நினைவிடங்களை இடிப்பேன் எனக் கூறிய அவர், சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தியவர்களுக்காகவா இவ்வளவு பிரம்மாண்ட நினைவிடங்கள் கட்டப்பட்டுள்ளன? எனக் கேள்வி எழுப்பினார்.
சீமான் உரையின் இறுதிக்கட்டத்தில், கூட்டத்தில் இருந்த சிலர் தவெக... தவெக... எனத் தமிழக வெற்றி கழகத்தின் பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த சீமான், தனது பேச்சை உடனடியாக நிறுத்தினார். குடிக்கிற மக்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம், தமிழ் குடிமக்கள் மட்டும் போடுங்கள் எனக் கூறிவிட்டு, விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டிப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!