கோவை தெற்கு சட்டசபைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் விதிமீறல்கள் நடந்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.) மூலம் பெறப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் சுயாதீன விசாரணைக் குழுவை அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜி 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாக அப்போது பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக ஒரு வாக்குக்கு ரூ.5,000 வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தேர்தல் ஆவணங்களை ஆய்வு செய்ததாக கூறிய ஈஸ்வரன், கோவை தெற்கு தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா தொடர்பாக 48 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவற்றில் இரண்டு வழக்குகளில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டதாகவும், மற்றொரு புகாருக்கு சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

ராமநாதபுரம் பகுதியில் நடந்த இரண்டு சம்பவங்களில் ரூ.1.86 லட்சம் மற்றும் ரூ.42,500 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த வழக்குகளில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆவணங்களில் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், வெரைட்டி ஹால் பகுதியில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் கரூரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். இதன் மூலம் வெளியூரிலிருந்து நபர்கள் வரவழைக்கப்பட்டு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக சந்தேகம் வலுப்பெறுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
டோக்கன் விநியோகம் தொடர்பாக மொத்தம் ஒன்பது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எட்டு புகார்கள் தி.மு.க.வைச் சார்ந்தவை என்றும், ஒன்று அ.தி.மு.க. தொடர்புடையது என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் புகார்கள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய ஏப்ரல் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே பதிவாகியிருப்பது முக்கிய அம்சமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தேர்தல் விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை இந்த குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!