எல்நினோ தாக்கத்தால் பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில், மசினகுடி வனச்சரகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. காடுகளுக்குள் உள்ள முக்கிய நீர்நிலைகள், குளங்கள் மற்றும் நீரோடைகள் முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால் வனவிலங்குகளுக்குக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதிகளில் பசுந்தீவனங்கள் கருகிப் போனதால் போதிய உணவும் தண்ணீரும் கிடைக்காமல் வனவிலங்குகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்து வருகின்றன.

இத்தகைய வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி, மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்றும் மற்றொரு பெண் யானை உயிரிழந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!
வெறும் 10 நாள் இடைவெளியில் ஒரே வனச்சரகத்தில் அடுத்தடுத்து 3 காட்டு யானைகள் தாகத்தாலும் பசியாலும் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!