தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் வேளையில், சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே நடந்த இரட்டைக் கொலையின் அதிர்ச்சி விலகும் முன்பே, அதே பாணியில் சிவகங்கையிலும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்திற்குள் நேற்று (மார்ச் 4) மாலை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மார்ச் 2-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் ஜான் மார்க் (மாற்றுத்திறனாளி) மற்றும் திரிநாத் கடா (ஒடிசா தொழிலாளி) ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் அதே போன்றதொரு தாக்குதல் சிவகங்கையிலும் நடந்துள்ளது.
இதையும் படிங்க: கை காட்டுனாராம்... வைரல் ஆச்சாம்..! இவரெல்லாம் முதல்வர்... சிவகங்கை தாக்குதல் சம்பவத்தால் கொந்தளித்த இபிஎஸ்..!!

இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். "உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; நீங்கள் ஒரு பொம்மை முதலமைச்சராக கைகட்டி வேடிக்கை பார்க்கிறீர்கள்" என அவர் தனது எக்ஸ் (X) பதிவில் பதிவிட்டுள்ளார்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குறிவைத்து இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜாதியப் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இடைக்காட்டூர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கையில் மெகா முதலீடு! ரூ.5,300 கோடியில் அமைகிறது எம்.ஆர்.எஃப் (MRF) டயர் ஆலை!