தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் (South Indian Film Writers Association) 2026 - 2029 ஆம் ஆண்டு பதவிக் காலத்திற்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர் அரங்கத்தில் இன்று (சூலை 19, 2026) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு முறைப்படி நிறைவடைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆவலோடு செலுத்தினர்.

சங்கத்தின் மிக முக்கிய பதவிகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இரு அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன: நம்ம கே.பாக்யராஜ் அணி – இயக்குநர் சேரன் தலைமையில் போட்டியிடுகிறது. திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அணி – இயக்குநர் குகநாதன் தலைமையில் போட்டியிடுகிறது.
இதையும் படிங்க: 100 ஆண்டுகால தண்ணீருக்காக போராடும் கட்சி பாமக: மேகேதாது அணை விவகாரத்தில் சௌமியா அன்புமணி பேட்டி!

இன்று காலை 8:00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, மாலை 4:05 மணி வரை எவ்வித சலசலப்புமின்றி அமைதியான முறையில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், சங்கத்தின் மொத்தமுள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அதில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய நிர்வாகப் பொறுப்புகளை ஏற்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: ஆப்பிரிக்கப் பயணி கொடுத்த க்ளூ.. சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!