தமிழக மக்களைப் படிப்பறிவற்றவர்கள் என விமர்சித்ததாகக் கூறப்படும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் தேவை என்றும், தமிழர்களைச் சீண்டினால் தமிழ்நாடு எதையும் இருமடங்காகத் திருப்பித் தரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்துப் பேசிய முதலமைச்சர் தமிழர்களைச் சொந்த நாட்டிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக்க தொகுதி மறுவரையறை கொண்டு வருகிறார்கள். இதனை நாம் எதிர்ப்பதால், தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் எனப் பாஜக பண்பாளர் பியூஷ் கோயல் கூறுகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை; இல்லையென்றால் தமிழ்நாடு எதையும் இருமடங்காகத்தான் திருப்பித் தரும் என ஆவேசமாக எச்சரித்தார்.
பாஜகவிற்கு வாக்களிப்பதன் விளைவுகள் குறித்து எச்சரித்த அவர் இப்படிப்பட்டவர்களுக்குச் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை நூறாண்டு பின்னோக்கித் தள்ளுவதற்கான வாக்கு. நமது உரிமைகளைப் பறிப்பவர்களுக்குத் தமிழகத்தில் இடமில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூர் மண்ணின் பெருமையைப் பற்றிக் குறிப்பிட்ட முதலமைச்சர் இந்திய விடுதலைக்கான முதல் புரட்சி வெடித்த வேலூர் மண், இன்றைய டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராகவும் சரியான தீர்ப்பை எழுதும். பாசிச பாஜகவின் நிழல் கூடத் தமிழ்நாடு மீது படியாமல் இந்த ஸ்டாலின் காப்பான் என உறுதி அளித்தார்.
தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் மொழி உரிமையைக் காக்கத் திமுக தொடர்ந்து போராடும் என்றும், பாஜகவின் அடக்குமுறைகளைத் தமிழக மக்கள் தேர்தல் மூலம் முறியடிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பியூஷ் கோயலின் விமர்சனம் மற்றும் அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள இந்த அதிரடிப் பதில், தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: எனக்கு வேண்டாம்... என் ஆதரவாளர்களுக்கு கொடுங்கள்! அண்ணாமலையின் அதிரடி 'சீட்' கோரிக்கை!