தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள போதிலும், தவெக-விற்கு ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118 கிடைக்காததால் தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் இழுபறியைத் தொடர்ந்து, கேரள மாநில கவர்னரும், தமிழக பொறுப்பு கவர்னருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வர உள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து கவர்னரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மிகப்பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதா அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை எதிர்பார்ப்பதா என்பது குறித்து கவர்னர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதில் இழுபறி: தவெகவிடம் துணை முதல்வர் பதவி கேட்கிறதா பாமக?
தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34.92% வாக்கு விழுக்காட்டைப் பெற்று (1,72,26,209 வாக்குகள்) அசுர சாதனை படைத்துள்ளது. கொளத்தூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது மற்றும் பல அமைச்சர்கள் வீழ்ச்சி அடைந்தது போன்ற சம்பவங்கள் திராவிடக் கோட்டைகளை ஆட்டிப்பார்த்துள்ளன.
தற்போதுள்ள நிலவரப்படி, காங்கிரஸ் மற்றும் பாமக போன்ற கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தி ஏற்கனவே விஜய்க்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக எம்எல்ஏக்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை: அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு தீவிரம்!