சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பலரும், தங்கள் துறை சார்ந்த விவகாரங்களை நேரடியாக புரிந்துகொள்ள தலைமை செயலகத்தில் உள்ள செயலர்களின் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தப் புதிய அணுகுமுறை அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் செங்கோட்டையன் ஒருவரைத் தவிர மற்ற 33 பேரும் புதிய முகங்கள். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன.
இந்த விவாதங்களின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் தெளிவான பதில்களை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கவர்னர் உரை விவாதத்தில் சில அமைச்சர்கள் மட்டுமே பதில் அளித்தனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் முதல் அமைச்சர்கள் வரை ஈசியா தொடர்பு கொள்ளலாம்! வெளியானது செல்போன் மற்றும் இமெயில் முகவரிகள்!

பெரும்பாலானோர் மௌனம் காத்ததால், வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில் இத்தகைய சூழல் ஏற்படக் கூடாது என அமைச்சர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான் துறை சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள செயலர்களின் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, “தினமும் ஒரு மணி நேரம் வரை சில அமைச்சர்கள் துறை செயலர்களை சந்தித்து பேசுகின்றனர். துறை தொடர்பான முக்கிய திட்டங்கள், நடைமுறை சிக்கல்கள், பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை ஆழமாக கேட்டறிந்து வருகின்றனர்” எனக் கூறப்படுகிறது.
முன்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் உள்ள செயலர்கள் அலுவலகங்களுக்கு செல்வது அரிது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்குகளுக்கு மட்டுமே வருவார்கள். ஆனால் இப்போது புதிய அமைச்சர்கள் பலரும் செயலர்களை நேரில் சந்தித்து தெளிவு பெறும் போக்கு அதிகரித்துள்ளது. இது அரசு இயந்திரம் சீராக இயங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் நெருங்கும் நிலையில், அமைச்சர்களின் இந்த ஆர்வம் சட்டசபையில் அவர்களின் செயல்பாட்டை வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!