மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்து இருந்ததாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது.

உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே செல்வப் பெருந்தகை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஆதாரமற்ற தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சா எப்படி? தீர்ப்பு எங்க பக்கம் தான்..! ராமதாஸ் உறுதி..!
செல்வப்பெருந்தகை கருத்தை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய தகவல்களை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ரத்து பண்ணுங்க...! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2 ல் விசாரணை..!