தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 116 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள இக்கட்சிக்கு பெரும்பான்மைக்கு இன்னும் இரு தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்த இரு இடங்களை வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது முடிவை இன்று மாலை அறிவிக்கவுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜய்க்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதரவாளர்கள் மற்றும் வாக்களித்த மக்கள் அமைதியைப் பேண வேண்டும் என்றும், எந்தவிதமான ஆபத்தான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் விஜய் உடனடியாக ஒரு செய்தியை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் தமிழிசை வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் மக்களுக்கு அக்கறை இருக்கிறது. மக்களின் தீர்ப்பை மதித்து பல வாய்ப்புகள் வழங்கப்படுவது உண்மை. ஆனால், இன்றைய அரசியல் சூழலை உணர்ச்சிபூர்வமாக மாற்றி சில தொண்டர்கள் நடந்துகொள்வது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: பரபரக்கும் தேர்தல் ரிசல்ட்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? தமிழிசை அதிரடி..!!
மேலும் அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலக வாசலில் ஒரு சகோதரர் பிளேடால் தன்னை வெட்டிக் கொண்ட சம்பவமும், வள்ளியூரில் மற்றொருவர் தீக்குளிக்க முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில், ஆதரவாளர்களிடையே உணர்ச்சிவசப்படும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் அரசியல் விவாதங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஜனநாயக முறையில் அமைதியான முடிவு எட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில், மக்களின் விருப்பத்தை மதித்து நிலையான அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். விஜய் தரப்பிலிருந்து உடனடியாக அமைதி வேண்டுகோள் வருமா என்பதை அடுத்த சில மணி நேரங்கள் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் சூழல் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், சில அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமைதியான முறையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: “விஜய் ஆட்சி அமைப்பதைப் பாஜக தடுக்கிறதா?”: நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள பரபரப்பு கேள்வி!