தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. கடந்த 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் நாளை 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய 2 தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடக்கிறது.
இதையும் படிங்க: கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

இதன் காரணமாக கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கங்காதீசுவரர் மேல்நிலைப்பள்ளி, இ.எல்.எம். பள்ளி, எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.சி.டி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, இவாட்ஸ் பள்ளி, வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி உட்பட 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பிறப்பித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 21 ஆம் தேதி மேற்கூறிய பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேரோட்டம் நடக்கும் கங்காதீசுவரர் கோயில் நுழைவாயில் - கங்காதீசுவரர் கோவில் வீதி, டாக்டர் அழகப்பா சாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சுமூக விநாயகர் கோவில் சந்திப்பு, கங்காதீசுவரர் கோவில் நுழைவாயில் வழியாக காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகை 2 மடங்கு உயர்வு.. யாருக்கு தெரியுமா? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!