முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்களால் போடப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாதம் 2-வது முறையாக நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணி, கோயில் மண்டபத்தில் நடந்தது. கோவில் வளாகத்தில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணும் பணி நடைபெற்றது.
தென்காசி உதவி ஆணையர் செந்தில்குமார், கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், கோவில் உதவி ஆணையர் நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, தக்காரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், சுப்பிரமணியன், வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல் எண்ணிக்கையில் மொத்தம் ரூ.2 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரத்து 514 பணம் கிடைத்துள்ளது. அதேபோல் 1 கிலோ 515 கிராம் தங்கம், 17 கிலோ 96 கிராம் வெள்ளி, பித்தளை 58.1 கிலோ, செம்பு 93.26 கிலோ, தகரம் 6.5 கிலோ மற்றும் 883 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!