தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மகளின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மரக்கடை தொழிலாளி, டைல்ஸ் கற்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகன் ஞானப்பிரகாசம் (47). இவர் மாப்பிள்ளையூரணியில் உள்ள மரக்கடை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதே கடையில் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த கிளின்டனும் வேலை செய்து வந்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக ஞானப்பிரகாசமும், அவரது மனைவி பாரதியும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாரதி தனது 2 குழந்தைகளுடன் கூட்டாம்புளியில் வசித்து வந்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது
சம்பவத்தன்று கூட்டாம்புளியில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்ற ஞானப்பிரகாசம், பாரதியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஞானப்பிரகாசத்தை வழிமறித்து டைல்ஸ் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஞானப்பிரகாசத்தின் மனைவி பாரதிக்கும், அவருடன் மரக்கடையில் பணியாற்றிய கிளின்டனுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும், கிளின்டனுக்கு பாரதி தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்ததாகவும், இதற்கு ஞானப்பிரகாசம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பவத்தன்று இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாரதியின் தூண்டுதலின் பேரில் கிளின்டன் தனது நண்பர் வினோத்துடன் சேர்ந்து ஞானப்பிரகாசத்தை டைல்ஸ் கற்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஞானப்பிரகாசத்தின் மனைவி பாரதி, கிளின்டன் மற்றும் அவரது நண்பர் வினோத் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!