முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: களைகட்டப்போகும் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா.. நாளை மறுநாள் யாகசாலை பூஜை..!
பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 27ம் தேதி காலையில் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லப விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் யாகவேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. மாலையில், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.

ஜூலை 1ம் தேதியான நாளை யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 8000 சதுரஅடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. யாக சாலை பூஜை நாளை தொடங்கி வரும் 7ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், நாள்தோறும் வடை, பாயாசத்துடன் அறுசுவை அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு தினத்தன்று 20 இடங்களில் கோயில் நிர்வாகம் சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
15 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் மீது டிரோன் மூலம், 20 இடங்களில் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருச்செந்தூரில் ஏற்கனவே 455 பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், கூடுதலாக 400 பேருந்துகளை சுழற்சி முறையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 30 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள், 18 தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

314 கழிவறை வசதிகளுடன் கூடுதலாக 510 தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 907 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்புப் பணியில் 6000-த்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட உள்ளனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடலோர பாதுகாப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், அந்தப் பகுதியில் நிறுத்தப்படுகின்றனர். 160 சிசிடிவி கேமராக்கள் மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.
ஜூலை 7-ந் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதன்பின்னர், காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து அன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்கச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
இதையும் படிங்க: குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!