தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டி, வரும் மார்ச் 15-ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் MLA இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களைக் கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" நடத்தப்பட உள்ளது.

வரும் மார்ச் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவிற்கு நடுக்கம் தொடங்கிவிட்டது! திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் மோடி அதிரடி பதிவு!
பாரதிய ஜனதா கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது; இதனைத் தட்டிக்கேட்க வேண்டியது நமது கடமை" என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜகவின் இந்தப் போராட்ட அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!