தமிழ்நாடு பதிவுத்துறை ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பத்திரப்பதிவு, திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் போன்ற சேவைகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றுகொண்டு காத்திருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த அலுவலகங்களுக்கு வருகை தருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை சார்பதிவாளர் அல்லது உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர்கள் கவனிக்கும்போது, பொதுமக்களை நிற்க வைக்காமல் அமர வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, ஒவ்வொரு சார்பதிவாளர் மேஜைக்கு எதிரிலும், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் மேஜைக்கு எதிரிலும் குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். பொதுமக்களை நாற்காலியில் அமர வைத்துத்தான் அதிகாரிகள் பேச வேண்டும். எந்த சூழ்நிலியிலும் அவர்களை நிற்க வைத்து பதில் அளிக்கக் கூடாது. முன்பு இதுபோன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டபோது பல அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை என தெரியவந்ததால், இந்த உத்தரவு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழம்பிய மக்கள்..! கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தமா..? தமிழக அரசு கொடுத்த விளக்கம்..!
துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் இந்த உத்தரவை கண்காணிக்க பொறுப்பேற்க வேண்டும். சிசிடிவி மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெறும். உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்கள், குறிப்பாக முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள், மரியாதையுடனும் வசதியுடனும் சேவை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: உளவுத்துறைக்கு புதிய தலைமை... அஸ்ரா கார்க் நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!