சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்ட விவகாரத்தில், எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 28-ஆம் தேதியே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கியத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் அவர் குறித்து இணையதளங்களில் அவதூறானக் கருத்துகளைப் பரப்பியதாகப் புகார் எழுந்தது.
நீதித்துறையின் மாண்பைச் சிதைக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிங்க: கலைத்துறைக்கு மகுடம் சூட்டும் தமிழ்நாடு அரசு! 2016-2022-ஆம் ஆண்டிற்கான மாநிலத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தமிழக அரசின் பதில் (பிரமாணப் பத்திரம்) உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இன்று தனது பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காவல்துறையினர் முறைப்படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவதூறு பரப்பப்பட்ட சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு உறுதி அளித்துள்ளது.
எடுக்கப்பட்டுள்ள முதற்கட்டப் புலனாய்வு மற்றும் சட்டப்பூர்வமானத் தரவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!