தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியத் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இன்று அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விருதுநகர், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையின்படி (G.O. Rt. No. 3212), பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றி வந்த சரண்யா அரி ஐஏஎஸ், விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொன்னேரி சார் ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த எஃப். அப்துல் ராஸிக் ஐஏஎஸ் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த வி. நல்லசிவன் ஐஏஎஸ் திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்கவுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜி. ரவிகுமார் ஐஏஎஸ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று பெருநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் முக்கிய வாரியங்களிலும் முக்கியத் தலைமைகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மேலாண் இயக்குநராகப் பணியாற்றிய திரு. டி. மோகன் ஐஏஎஸ், உள்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் வி.பி. ஜெயசீலன் ஐஏஎஸ் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா ஐஏஎஸ், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சட்டசபை அனுமதியின்றி ரூ.2000 கோடி சாலைப் பணிகள்: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார்!
நிதித்துறை இணைச் செயலாளர் ராஜ கோபால் சுன்கரா ஐஏஎஸ், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநகராட்சி நிர்வாகங்களிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர பிரதாப் சிங் ஐஏஎஸ், சிப்காட் (SIPCOT) செயல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த என். பொன்மணி ஐஏஎஸ், திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிப்காட் செயல் இயக்குநராக இருந்த திருமதி ஏ. கேத்தரின் சரண்யா ஐஏஎஸ் வேலூர் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை இணை ஆணையராக இருந்த திருமதி ஸ்ரேயா பி. சிங் ஐஏஎஸ் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை வணிக வரித்துறை இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் (சுகாதாரம்), செல்வி கே. சங்கீதா ஐஏஎஸ் கோவை வணிக வரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் பல துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மெகா ஐஏஎஸ் இடமாற்றம் கோட்டை வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: துபாய் பறக்கும் முதல்வர் விஜய்: நடிகர் அஜித்துடன் திடீர் சந்திப்பு; லண்டனில் முதலீட்டாளர்கள் மாநாடு!