தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி ஆவின் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்; வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் இது குறித்துச் சட்டப்பேரவையில் அறிவிக்கவில்லை என்றால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்குப் பால் அனுப்புவதை நிறுத்திவிட்டுத் தனியார் நிறுவனங்களுக்குப் பால் வழங்கும் ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் மற்றும் ஆவின் பிரதம சங்கங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.60-ம் கொள்முதல் விலையாக வழங்கிட வேண்டும். அரசு போதிய கொள்முதல் விலையை உயர்த்தாததால், கிராமப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை கூடுதலாகக் கொடுத்துப் பாலைக் கொள்முதல் செய்து வருகின்றன.

கொரோனா காலத்தில் நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் கொள்முதல், தற்போது தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் 28 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. இதனால் சென்னையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு, பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறச் சங்கப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
ஆவின் சங்கங்களால் தரம் குறைவாக உள்ளது எனக் கூறித் திருப்பி அனுப்பப்படும் சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்த பாலைக் கூடத் தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றன. இது ஆவின் நிறுவனத்தின் எதிர்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் ஆவினைக் காப்பாற்றவும், சங்கங்களின் நிர்வாகச் செலவு மற்றும் மார்ஜின் தொகையை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை; அரசை நெருக்கடிக்குத் தள்ள நாங்கள் விரும்பவில்லை. வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் கொள்முதல் விலை உயர்வு குறித்துச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட வேண்டும். தவறினால், ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்திவிட்டுத் தனியாருக்குப் பால் வழங்கும் ஒரு நாள் அடையாளப் போராட்டத்தை முன்னெடுப்போம். தேவைப்பட்டால் விவசாயச் சங்கங்களின் ஆதரவோடும் போராட்டம் தொடரும், எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!