தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்களின் அடுத்தகட்ட இலக்கான உயர்கல்விச் சேர்க்கை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், 2026-27-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அறிவிப்பைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இன்று முதல் மாணவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் விண்ணப்பங்களைப் பதியத் தொடங்கலாம்.
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் 03.05.2026 முதல் 02.06.2026 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்காக www.tneaonline.org என்ற பிரத்யேக இணையதளம் தயார் நிலையில் உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் OC / BC / BCM / MBC & DNC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹500 ஆகும். SC / SCA / ST பிரிவினருக்குக் கட்டணச் சலுகையாக ₹250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை இணையதளம் வாயிலாகவே (Net Banking/Debit/Credit Card) செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புழல் சிறையிலிருந்த ஞானசேகரனுக்கு நள்ளிரவில் திடீர் அதிர்ச்சி... அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?
மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் பல விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் முறை குறித்த தமிழ் மற்றும் ஆங்கில வழிகாட்டுதல்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் ஒதுக்கப்பட்ட Cut-off மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைப் பட்டியல். சான்றிதழ்களைப் பதிவேற்றும் முறை பற்றிய ஒலி-ஒளி விளக்கங்கள். சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் மாதிரிகள்.
இணையதள வசதி இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் (TNEA Facilitation Centers) நிறுவப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
மேலும், மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் ஒரு பிரத்யேக அழைப்பு மையம் (Call Center) அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 1800-425-0110 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொண்டு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெறலாம். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்புவோர் tneacare@gmail.com என்ற முகவரிக்குத் தங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரத் துடிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய ஆரம்பப்புள்ளியாக அமைந்துள்ளது. குறித்த காலத்திற்குள் விண்ணப்பித்து மாணவர்கள் தங்கள் எதிர்காலப் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்! கட்டண உயர்வு மற்றும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி!