திண்டுக்கல் மாவட்டம், மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் மற்றும் முறைப்படுத்தப்படாத கட்டண உயர்வு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மலைச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக, நான்காம் நாளாக இன்றும் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதால், சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிப்பதில் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பயன்படுத்திக் கொண்டு, உணவகங்கள் மற்றும் விடுதிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கொடைக்கானலில் உள்ள பல்வேறு உணவகங்களில் முறையான விலைப்பட்டியல் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனைப் பயன்படுத்தி, உணவுகளின் விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களின் வாடகை மூன்று மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!
பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வரும் தங்களுக்கு, முறையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உள்ளூர்வாசிகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!