தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள வயது விபரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தொகுதிகளுக்கிடையே வித்தியாசம், கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூர் தொகுதிக்காக விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது வயது 51 எனக் குறிப்பிட்டுள்ளார். சரியாக இரண்டு நாட்கள் இடைவெளியில், நேற்று (ஏப்ரல் 02) திருச்சி கிழக்குத் தொகுதிக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தனது வயது 52 எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வேட்பாளர், இருவேறு தொகுதிகளில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் வயது விபரம் மாறுபட்டிருப்பது, "இரண்டே நாட்களில் ஒரு வயது கூடிவிட்டதா?" என்ற கிண்டலான விமர்சனங்களை எதிர்க்கட்சியினரிடையே எழுப்பியுள்ளது.

வயது விபரம் மட்டுமின்றி, தன் மீதுள்ள வழக்குகள் குறித்த விபரங்களிலும் முரண்பாடு இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன: பெரம்பூர் வேட்பு மனுவில் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டுத் தகவல்களை மறைக்கும் செயலா அல்லது கவனக்குறைவா என்ற கேள்வியைத் தேர்தல் ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராகத் தன்னைக் முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு தலைவர், மிக முக்கியமான தேர்தல் ஆவணமான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, இவ்வளவு அடிப்படைத் தவறுகளைச் செய்யலாமா? என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, இந்த முரண்பாடுகள் காரணமாக மனுக்கள் நிராகரிக்கப்படுமா அல்லது திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!