தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்துத் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பல சவால்களையும், தடைகளையும் கடந்துதான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது. இது எதிர்நீச்சல் போட்டுப் பழகிய கட்சி. எந்தச் சவால்களைக் கண்டும் நாங்கள் அஞ்சப் போவதில்லை; அதனைத் தாண்டி நிச்சயம் வெற்றி பெறுவோம் எனப் பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்தார்.

இந்தத் தேர்தல் களம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் களமாகும். எங்களது கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொண்டர்களின் உற்சாகமும், மக்களின் ஆதரவும் எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது.
இதையும் படிங்க: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொகுதிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு அனைத்தும் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகப் பாமக போட்டியிடும் சில முக்கியத் தொகுதிகளில் தேமுதிக தனது பலத்தைக் காட்டும் எனத் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களிலும், பிற இடங்களிலும் தேமுதிக-வை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், எங்களிடம் வாக்கு வங்கி இல்லை எனப் பேசுபவர்களுக்குத் தேர்தல் முடிவுகள் தகுந்த பதிலடி கொடுக்கும். மக்கள் இப்போதும் கேப்டன் மீது மாறாத அன்பு வைத்திருக்கிறார்கள். அந்த அன்பு எங்களை வெற்றியடையச் செய்யும் என உருக்கமாகத் தெரிவித்தார்.
தற்போது சென்னையிலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த், வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!