தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்க உள்ளது. அதேநேரத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரமும் இடம்பெற உள்ளதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினமும், வேளாண் பட்ஜெட் நேற்றும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த பட்ஜெட்டுகள் மீதான விவாதம் இன்று முதல் சட்டப்பேரவையில் தொடங்குகிறது.
மேலும், இன்று முதல் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மற்றும் நேரமில்லா நேரமும் இடம்பெற உள்ளது. கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!
நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி, 29 சட்டமன்ற உறுப்பினர்கள் 110 கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானங்களை அளித்துள்ளனர்.
குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சி சார்பில் காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேரவையில் பேசிய சபாநாயகர், கவன ஈர்ப்புத் தீர்மானங்களுக்கு உரிய பதில்களை அமைச்சர்கள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
முதல் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே பதிலளித்தனர். எனவே, இந்தக் கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நேரடியாக பதிலளிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான வரிப் பகிர்வு தொடர்பான அரசின் தனித் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வெல்சன் முன்மொழிகிறார்.
அந்தத் தீர்மானத்தில், தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும், வரிப் பகிர்வுக்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னாச்சு? தவெக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் மு.வீரபாண்டியன்!