திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பயங்கரவாத ஆதரவாளர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் எனச் சட்டம் ஒழுங்கு உச்சகட்ட சீர்கேட்டை அடைந்துள்ளது. இப்போது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைச் 'சிலிண்டர் வெடிப்பு' எனத் திசைதிருப்பி மக்களை ஏமாற்ற முயன்றது திமுக அரசு. இப்போது டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தொடர்புகளை இந்த அரசு என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023-இல் தொடங்கப்பட்ட 'தமிழக தீவிரவாத தடுப்புப் படை' (ATS), டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தூங்கிக் கொண்டிருந்ததா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் சாடியுள்ளார்
.
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தைக் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, இப்போது பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் திமுக மாற்றியுள்ளது. இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள் என அவர் தனது அறிக்கையில் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மாநில அரசின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், உளவுத்துறையும் காவல்துறையும் அரசியல் காரணங்களுக்காகத் திசைதிருப்பப்படுவதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் ஜெயலலிதா - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நெகிழ்ச்சி!