தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய நீர்நிலைகளை சீரமைக்கும் வகையில் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என். ஆனந்த் இன்று சென்னையில் நீர்நிலைகள் தூர் வாரும் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் சிறப்பு இயக்கத்தின் மூலம் சென்னைப் பகுதியின் நீர் வழிகளை முழுமையாக சுத்தப்படுத்தி, வெள்ள அபாயத்தை குறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது. நீர்நிலைகள் தூர்வாரும் பணி நடைபெறும் இடத்திற்கு வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக அமைச்சர் ஆனந்த் பைக்கிலேயே நிகழ்வு இடத்திற்கு வந்தார்.
சென்னைப் பகுதியில் சுமார் 60 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கிய ஆறுகள், 54 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் மற்றும் சுமார் 3,700 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் தூர் வாருதல், கரைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகள் நீர்வளத்துறை (WRD) மூலம் நடைபெறுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. பருவமழைக்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம்.

அமைச்சர் ஆனந்த் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், மூன்று நாட்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆறு முக்கிய இடங்களில் கள ஆய்வு செய்தார். முதல் நாளான இன்று கோயம்பேடு அருகே உள்ள கூவம் ஆற்றுப் பகுதி மற்றும் ஒக்கியம் தொரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒக்கியம் மடுவு வாய்க்காலை ஆய்வு செய்தார். அடுத்த நாட்களில் அடையாறு ஆறு (மணப்பாக்கம் அருகே), தென் பக்கிங்காம் கால்வாய் (சோழிங்கநல்லூர் அக்கரை பாலம் அருகே), வேலச்சேரி ஏரி மற்றும் நாராயணபுரம் ஏரி உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார். சட்டமன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள், கார்ப்பரேட் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த ஆய்வுகளில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: "தன்னை நீக்க அதிகாரம் இல்லை"..! கட்சியை விட்டு நீக்கிய மா. செ..! வழக்கறிஞர் ஞான சௌந்தரி பதிலடி..!
இந்த முயற்சி சென்னையின் முக்கிய நீர் வளங்களான கூவம், அடையாறு, கொசஸ்தலையார் ஆறுகள், பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு, அடையாறு, கூவம், முட்டுக்காடு முகத்துவாரங்கள் மற்றும் வேலச்சேரி, புழல், நாராயணபுரம், ஆதம்பாக்கம், கொவிலம்பாக்கம் போன்ற ஏரிகளை உள்ளடக்கியது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! அமைச்சர் ஆனந்தை சந்திக்கும் அன்புமணி..!!