தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தைத் (தவெக) தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மிகப்பெரிய சலுகைகளை முன்வைத்ததாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகைய அதிகாரப் பேரங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனத் தவெக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக-வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைக்க, பாஜக தரப்பில் 90 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆட்சியைப் பிடித்தால் ஆளுக்கு இரண்டரை (2.5) ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற அதிகாரப் பகிர்வு பேரமும் பேசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வரை, விஜய்க்குத் துணை முதலமைச்சர் பதவியும் 80 இடங்களும் ஒதுக்க பாஜக முன்வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது பேரம் முதலமைச்சர் பதவி வரை நீண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி எல்லோராலும் மதிக்கப்படுபவர்! தவெக நிர்வாகியின் பேச்சிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பதவிக்காகவோ அல்லது அதிகாரத்திற்காகவோ டெல்லிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் எனத் தவெக நிர்வாகிகள் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர். கட்சியின் கொள்கையான மதச்சார்பற்ற சமூக நீதி என்பதற்கு மாறாகத் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது.
இன்று மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எந்தப் பேரத்திற்கும் நாங்கள் மயங்க மாட்டோம்; வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே களம் காணும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். இது அனைத்து விதமான கூட்டணி யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசமே வெற்றியைத் தீர்மானிக்கும் சூழலில், விஜய்யின் 13.6% என எதிர்பார்க்கப்படும் வாக்கு வங்கியைத் தங்களது பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், விஜய்யின் சமீபத்திய உரைகள் திமுக-வை மட்டுமே தாக்கி வருவதால், அவர் யாருக்குச் சாதகமாகச் செயல்படுகிறார் என்ற விவாதமும் அரசியல் அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!