சென்னை வியாசர்பாடி., முல்லை நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியதாகவும், வரம்பு மீறி பேசி அத்துமீறி செயல்படுவதை பார்த்து கேள்வி எழுப்பிய தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து கீழே தள்ளி உள்ளதாகவும், இதை தடுக்கச் சென்ற கழக மகளிர் அணியை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையை காவல்துறையினர் பிடித்து இழுத்து தள்ளி உள்ளதாகவும், இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விஜய் கூறியுள்ளார்.

தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா என்றும் காவல் துறையின் இந்த செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மே 30ல் மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.. 2 கட்டங்களாக கல்வி விருது விழா..!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா என்றும் தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா எனவும் காட்டமாக கூறியுள்ளார்.

காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது., பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு சலுகைகளை எதிர்பாரா தன்னலமற்ற சேவைக்கு சொந்தக்காரர்! தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்..!.