கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. போலீஸ் FIR-யில் கூட, அவர் தாமதமாக வந்ததாகவும், போலீஸ் எச்சரிக்கையை கேட்கவில்லை என்றும் குற்றச்சாட்டு பதிவானது. சென்னை உயர்நீதிமன்றம் கூட, இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கண்டனம் தெரிவித்து, விஜய்யிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்று கடுமையாகக் கூறியது.

இதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தினர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். விரைவில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவார் என தெரிவிக்கப்பட்டது. வீடியோ கால் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உரையாடியதாகவும் கூறப்பட்டது. இதனிடையில், கரூர் செல்ல விஜய் திட்டமிட்டு இருக்கும் நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. விஜய் செல்லக்குள்ளதாக கூறப்பட்ட நிலையில் அங்கு தனியார் மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் கரூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரச்சம்பவம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கியது தவெக...!
பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் சென்னைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்த பின்னர் தேதி முடிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை சென்னைக்கு வர ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. கரூரில் நிகழ்ச்சிக்கான மண்டபம் கிடைப்பது சிக்கல் நீடிப்பதால் இந்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் ஆறாத வடுக்கள்... தவெகவினர் தீபாவளி கொண்டாட வேண்டாம்... கட்சி தலைமை அறிவுறுத்தல்...!