ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் பரபர புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், தி.மு.க நிர்வாகிகளிடம் பெண்களை அனுப்ப முயற்சித்தாகவும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் மகளிர் காவல் நிலைய போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாகியது. எதிர்க்கட்சிகள் இதனை வைத்து திமுக அரசை விமர்சித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என்னும் வாதத்தை முன் வைத்தார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்ததாவது; ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது. மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். "பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய மு.க.ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?

பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்! பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷின் PA உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! 20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா? எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்! என கூறி இருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடக்க உள்ளதாக ராணிப்பேட்டை அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது..

இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயலை அப்பதவியில் இருந்து நீக்குவதாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பழங்கால சிலை கடத்தலில் திமுக எல்.எம்.ஏவுக்கு தொடர்பு.. போட்டோ போட்டு பொளந்து கட்டிய அண்ணாமலை..!