டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்றும், இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்நாடு படுகுழியில் விழுந்துவிட்டதாகவும், கடனில் தத்தளிப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்த முதலமைச்சர், இப்போது டெல்லியில் சென்று தமிழ்நாட்டின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.
இந்த சாதனைகள் அவரது ஒரு மாத சோபா மாடல் ஆட்சியில் நிகழ்ந்ததா? அல்லது ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எழுதி கொடுத்ததை படிச்சா போதுமா?! மு.க.ஸ்டாலின் மீது நிர்வாகிகள் புகார்! கள ஆய்வு கூட்டத்தில் அப்செட்!

மேலும், “தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கோரிக்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். மேகதாது பிரச்சினையைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஆட்சி செய்யும் தனது கூட்டணிக் கட்சியிடம் கூட வாய் திறக்காமல் மௌனம் காத்தார்” என உதயநிதி விமர்சித்தார்.
“மொத்தத்தில், டி.எம்.கே. அரசின் சாதனைகளுக்கு முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டி, சோபா மாடல் அரசு தன்னுடையதாக காட்ட முயற்சிக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசி மக்களை ஏமாற்றி பெற்ற போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது. உண்மை நிச்சயம் வெல்லும்” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!