அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் ஏற்றுமதி துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ஆம் பிரிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில நாடுகளில் பொருட்கள் தயாரிப்பில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவுக்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 10 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

இதுகுறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மீது நீண்ட காலமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன என்றும், இதேபோன்ற நடவடிக்கைகளை வர்த்தக கூட்டாளி நாடுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கும், உலக தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய வரி இந்தியா மட்டுமல்லாமல் அர்ஜென்டினா, வங்கதேசம், பிரிட்டன், கம்போடியா, கனடா, ஈக்வடார், எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், இந்தோனேசியா, ஜோர்டான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை மற்றும் டிரினிடாட் & டொபாகோ ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும்.
இந்த முடிவு உலகளாவிய வர்த்தக உறவுகளில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவனித்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு நடைமுறையில் எந்தெந்த பொருட்களை பாதிக்கும், இந்தியாவின் பதில் என்ன என்பது வரும் நாட்களில் முக்கியமாக கவனிக்கப்படும்.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!