உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்து மதச் சடங்கு முறைகள் மற்றும் சாதியப் படிநிலை வழக்கங்களை அமைச்சர் மரியா வில்சன் தலையிட்டு மாற்றுவாரா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் மிக முக்கியக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகப் பதிவில், புதுச்சேரியில் இயங்கி வரும் ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட் வேளாங்கண்ணி திருவிழா குறித்து வெளியிட்டுள்ள பிரத்யேக ஆய்வு நூல் ஒன்றில் பல்வேறு வரலாற்று உண்மைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ப்ரிஜிட் செபஸ்தியா எழுதியுள்ள அந்த ஆய்வு நூல், இந்தத் திருவிழாவின் நெடிய வரலாற்றையும், விழா நடைபெறும் நடைமுறைகளையும், அதில் இயல்பாகக் கலந்துள்ள இந்து மதக் கூறுகளையும் மிக விரிவாக விவரிக்கிறது.
வெளியூர்களிலிருந்து வேண்டுதலின்பேரில் பாதயாத்திரையாக நடந்துவரும் பக்தர்கள் நீலம், பச்சை, காவி என ஏதேனும் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது, நாற்பது நாட்கள் கடுமையான விரதமிருப்பது, கால்களில் செருப்பு அணியாமல் நடந்து வருவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாருக்கும் சோபா இருப்பதுதான் திராவிட மாடல்! திமுகவினர் விமர்சனத்திற்கு அமைச்சர் வன்னியரசு ஓபன் டாக்!
மேலும், "பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மது அருந்துதல், புகை பிடித்தல், அசைவ உணவு உட்கொள்ளுதல் மற்றும் தாம்பத்திய உறவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து விரதமிருக்கின்றனர். வேளாங்கண்ணி எல்லையை நெருங்கியதும் புனித நீராடி, புத்தாடை உடுத்தி அதன் பின்னரே தேவாலயத்திற்குள் சென்று அன்னையை வழிபடுகின்றனர்.

இந்த நடைமுறைகள் அச்சு அசலாக இந்து மத வழக்கங்களைப் போன்றே இருந்த காரணத்தால், இதற்கு கடந்த 18-ஆம் நூற்றாண்டிலேயே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இத்தகைய வழிபாட்டு முறைகளை மட்டுமின்றி, இந்து மதத்தின் சாதியப் படிமுறையையும் 'மதுரை மிஷன்' என அழைக்கப்பட்ட இயேசு சபை பாதிரிமார்கள் தங்களது பணிகளில் தீவிரமாகப் பின்பற்றினர்.
மதமாற்றம் எவ்விதத் தடையுமின்றி சுமூகமாக நடக்க வேண்டுமென்றால், மக்களின் மரபுசார்ந்த இந்து மத நம்பிக்கைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் கணக்குப் போட்டனர். ஆனால், இதனைப் பாண்டிச்சேரியிலிருந்த கப்பூச்சியன் சபையினர் மிகக் கடுமையாக எதிர்த்தனர்" என்று ரவிக்குமார் எம்.பி. விளக்கியுள்ளார்.
தொடர்ந்து அந்த நூலை மேற்கோள்காட்டிப் பதிவிட்டுள்ள அவர், இந்து மதத்தில் கோயிலுக்குப் போவதற்கு முன் குளித்துச் சுத்தம் செய்துகொள்வது என்பது வெறும் உடல் தூய்மை தொடர்பானது மட்டுமல்ல, அது தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து விடுபடும் ஆன்மிக நம்பிக்கையாகும்.
இதனை மூடநம்பிக்கையாகக் கருதிய தீவிரப் பாதிரியார்கள், வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் நீராடுவதைத் தடுப்பதற்காக மாதா கோவில் குளத்தையே சிமெண்ட் பலகைகளால் மூடிப் பார்த்தனர்; ஆனால் பக்தர்களோ கடலில் நீராடிவிட்டு வரத் தொடங்கினர் என ப்ரிஜிட் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி, இந்துக் கோயில்களில் விமரிசையாக நடைபெறும் மண்டகப்படிகளைப் போன்றே இங்கும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ஆம் தேதி வரை சாதிவாரியான மண்டகப்படிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய சாதிய நடைமுறைகளை அமைச்சர் மரியா வில்சன் மாற்றுவாரா? என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!