சமூகத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் உறுதி செய்யப்படுவதுதான் உண்மையான திராவிட மாடல் என்றும், ஆனால் இன்றைக்கு திமுகவினரும் அதன் ஆதரவாளர்களும் கொள்கை எதிரியான பாஜகவை அம்பலப்படுத்துவதை விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் குறிவைத்து விமர்சிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு மிக வெளிப்படையாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற 1501-வது மிலாது நபி விழாவில் அமைச்சர்கள் வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் வன்னியரசு, சமத்துவக் கோட்பாடுகளையும் தற்போதைய அரசியல் சூழல்களையும் முன்வைத்து மிகத் தீர்க்கமான கருத்துகளை முன்வைத்தார்.
திராவிட மாடல் என்பது வெறும் முழக்கம் அல்ல; அது எல்லோரையும் சமமாக அமர வைப்பது. அனைவருக்கும் கல்வி, தரமான சாலைகள், அடிப்படை வசதிகள் என அனைத்தும் சமத்துவமாகப் போய்ச் சேருவதுதான் அந்த மாடல். உங்கள் வீட்டில் மட்டும் சோபா இருக்கலாம்; ஆனால் விளிம்புநிலை மக்களின் வீட்டில் சோபா வாங்கினால் உடனே அதற்குக் கணக்கு கேட்கும் மனநிலை நீடித்தால் அது ஒருபோதும் சமத்துவமாகாது என அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!

திமுகவினரின் விமர்சனப் போக்கு குறித்துப் பேசிய அவர், இன்றைக்கு திமுக தோழர்களும் அதன் ஆதரவாளர்களும் பாஜகவின் செயல்பாடுகளை விமர்சிப்பதையும், அவற்றை அம்பலப்படுத்துவதையும் விட விசிக மீதுதான் அதீத கவனம் செலுத்துகிறார்கள். விசிக என்ன செய்கிறது, கட்சியின் தலைவர் என்ன பேசுகிறார், யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மட்டுமே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நாங்கள் மக்களுக்கு ஆற்றிய பணிகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்துப் பேச வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது; அதை விடுத்து எப்போதும் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே எங்கள் அரசியல் நோக்கம் அல்ல. அவர்களின் செயல்பாடுகள் சாமானிய மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவதுதான் முக்கியம் எனக் கூறினார்.
தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அமைச்சர் வன்னியரசு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியில் இருந்தாலும், எந்தச் சூழல் வந்தாலும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சமரசமின்றித் தொடர்ந்து களத்தில் நின்று வருகிறோம்.
மக்களின் உரிமைகளையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் ஒரு நல்ல ஆட்சியாகவே தற்போதைய நிர்வாகம் இயங்கி வருகிறது. யார் விமர்சித்தாலும் சமத்துவம், சமூகநீதி மற்றும் மக்களுக்கான களப்பணியே எங்கள் முதன்மையான பயணமாக இருக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!