நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே அடக்கி வாசியுங்கள் இல்லை என்றால் அடக்கப்படுவீர்கள் என நடிகர் விஜயின் புகைப்படத்தை போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் , பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கடந்த 30ஆம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது ஒரு சில மாணவிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், சிலர் கட்டிப்பிடித்தும் தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரன் முக்கிய தகவல்!!

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த கூட்டத்தில் நடிகரை நடிகராக பாருங்கள் நடிகருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது தவறானது என விமர்சித்து பேசினார். வேல்முருகன் பேசிய இந்த பேச்சு, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வேல்முருகனை கண்டித்து , தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சேலம் அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், சேலம் ஆட்சியர் அலுவலக சாலை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் விஜயை கண்டித்தும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில், "எச்சரிக்கை, எச்சரிக்கை , நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே அடக்கி வாசியுங்கள் இல்லையெனில், அடக்கப்படுவீர்கள். தமிழக வெற்றிக்கழக ரசிகர் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை" என எழுதப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜயின் புகைப்படத்தை சிகப்பு மையினால் அழித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இப்படிக்கு மாணவர் அணி பொறுப்பாளர் கரும்புலி கவியரசன் என்று குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!