விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சி மருத்துவர் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகள் வர்ஷா (21). இவருக்கும், முத்துக்குமாரின் அக்கா மகனான யுவராஜாவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வர்ஷா யுவராஜாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று காலை வர்ஷா தனது வீட்டின் முன்பு துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, அரிவாளுடன் அங்கு வந்த யுவராஜா திடீரென அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வர்ஷா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய தந்தை, மகன் கொடூர கொலை..! மேலும் 2 பேர் சரண்... தொடரும் விசாரணை..!
அந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய வர்ஷாவின் தாயார் விநாயகஜோதி (45), மகளை காப்பாற்ற முயன்ற போது யுவராஜா அவரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் விநாயகஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வர்ஷாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விநாயகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து யுவராஜா, பயன்படுத்திய அரிவாளுடன் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதுடன், தடுக்க வந்த அவரது தாயை வெட்டிக்கொன்ற இந்த சம்பவம் கல்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING காதலிக்க மறுத்த பெண் கொடூரக்கொலை... கத்தியால் சரமாரியாக குத்திய கொடூரன் கைது...!