தமிழக அரசு 2025-ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, திறன் மேம்பாடு, மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக மிஷன் இயற்கை என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி தோட்டங்கள், மழை நீர் சேகரிப்பு, கழிவு மேலாண்மை, நெகிழி பயன்பாடு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு கற்பிக்கும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காகவும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாகவும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அறிவியல், பொறியியல், கணிதத்தில் மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் ஸ்டெம் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

இது மட்டுமில்லாமல் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உள்ளிட்டவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் சிசிடிவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கவும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நீர்ச்சத்து குறைபாட்டினை போக்குவதற்காக வாட்டர் பெல் என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, நீரிழப்பு மற்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இன்று திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசு பள்ளிகளில் அமல்படுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்கள் தங்கள் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளைத் தடுக்க இத்திட்டம் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த வாட்டர் பெல் திட்டத்திற்காக காலை 11 மணி, பிற்பகல் ஒரு மணி, பிற்பகல் 3 மணிக்கு மாணவர்களுக்கு நீர் அருந்துவதற்கான இடைவுகளை விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நிமிடம் வரை இடைவேளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.. நீர்ச்சத்து குறைபாட்டில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: ’டிரஸைக் கழட்டுங்க’ பள்ளி சென்று திரும்பிய சிறுவர், சிறுமிகளை மிரட்டி ஆபாச புகைப்படம் - இருவரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...!